அருப்புக்கோட்டை, ஆக.1: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மலையரசன் கோவில் சாலையில் மின் கம்பிளை உரசும் மரக்கிளைகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் அம்மரக்கிளைகளை அகற்றக் கோரிக்கை எழுந்துள்ளது.
அருப்புக்கோட்டை தெற்குத்தெருவிலிருந்து மலையரசன் கோவில் செல்லும் சாலையில் தனியார் மர அறுவை ஆலை ஒன்று உள்ளது. இதனருகே சாலையோரம் உள்ள இரட்டை மின் கம்பங்களிலிருந்து அடுத்துள்ள மின் கம்பத்திற்குச் செல்லும் மின் கம்பிகளை அச்சாலையோரம் உள்ள மரத்தின் கிளைகள் உரசிய வண்ணம் உள்ளன.
இதனால் மழை அல்லது காற்று வீச்சுக்குக் கிளைகள் அசையும் போது மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இப்பகுதியினரும் மழைக்காலங்களில் இந்த மின்கம்பங்கள் உள்ள இடத்தை அச்சத்துடனே கடந்து செல்ல நேர்கிறது.
இந்நிலையில் பொதுமக்கள் இம்மரக்கிளைகளைத் தாமே அகற்ற முற்பட்டால் மின்சாரம் பாய்ந்து விபத்து நேருமோ என அச்சம் கொள்கின்றனர். இதனால் மின்வாரிய ஊழியர்கள் உரிய முறையான நடவடிக்கை மூலம் இம்மரக்கிளைகளை அகற்றக் கோரி இப்பகுதிவாசிகள் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லையெனப் புகார் எழுந்துள்ளது.
எனவே விபத்து நேரும் முன்பாக மின்கம்பிகளை உரசும் மரக்கிளைகளை அகற்ற வேண்டுமென இப்பகுதிவாசிகள் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.