மெஹபூபா வீட்டுக் காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு: ப.சிதம்பரம் கண்டனம்

ஜம்-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெஹபூபா முப்தியின் வீட்டுக் காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பம் கண்டனம் தெரிவ
மெஹபூபா வீட்டுக் காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு: ப.சிதம்பரம் கண்டனம்



ஜம்-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெஹபூபா முப்தியின் வீட்டுக் காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பம் கண்டனம் தெரிவித்துள்ளார். 

ஜம்-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டதையொட்டு முப்தி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டனர். தற்போது தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள முப்தியின் காவல் வரும் 5 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், அவரது வீட்டுக் காவலை மேலும் மாதங்களுக்கு நீட்டித்து மாநில உள்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இது தொடர்பாக ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:

''பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மெஹபூபா முப்திக்கு வீட்டுக் காவலை மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டிருப்பது சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதும் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கிய உரிமைகள் மீதான தாக்குதல் ஆகும். 

61 வயதான முன்னாள் முதல்வர், 24 மணிநேரமும் பாதுகாப்புக் காவலரின் கீழ் பாதுகாக்கப்பட்ட நபராக இருக்கும் போது, எந்த அடிப்படையில் பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பார்?

நிபந்தனை அடிப்படையில் விடுவிக்கிறேன் என்று கூறும்போது, எந்த ஒரு சுயமரியாதை உள்ள அரசியல் தலைவரும், அதை நிராகரிக்க உரிமை உண்டு. அதனால் அவர் நிராகரித்தார். வீட்டுக் காவலில் மெஹபூபாவை வீட்டுக் காவலில் வைத்தமைக்கு அவரது கட்சியின் கொடியின் நிறத்தைக் காரணமாகக் கூறுவது நகைப்புரியதாக உள்ளது. 

அரசியலமைப்புச் சட்டத்தில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக மெஹபூபா முப்தி ஏன் பேசக்கூடாது? அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றான பேச்சு சுதந்திரத்தில் ஒரு பகுதியாக இல்லையா?

அரசியலமைப்புச் சட்டத்தில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான வழக்குரைஞர்களில் நானும் ஒருவன். 370-வது பிரிவுக்கு எதிராக நான் பேசினால், நான் பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பேனா?

நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாக இணைந்து குரல் கொடுத்து, "மெஹபூபா முப்தியை உடனடியாக விடுக்க வலியுறுத்துவோம்''  என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com