ஸ்ரீவில்லிபுத்தூர், ஆகஸ்ட்.1: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் மில்லுக்கு சொந்தமான வேன் கவிழ்ந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் வன்னியம்பட்டி காவல் நிலையம் அருகே தனியார் மில் ஒன்று உள்ளது. இந்த மில்லுக்கு சொந்தமான வாகனம் ஒன்றில் சங்கரன்கோவில் தாலுகா பெரும்பத்தூர் கிராமத்தைச் சார்ந்த ராஜதுரை (38 வயது) என்பவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
இன்று (சனிக்கிழமை) பணியாளர்களை ஏற்றுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுரைக்காய்பட்டி கிராமத்திற்கு வேனை ஓட்டி சென்றார்.
கரிசல்குளம் அருகே செல்லும்போது எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
தகவலறிந்து நத்தம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஓட்டுநரின் பிரேதத்தை கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.