வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மல்லிகைப் பூ பறிக்கச் சென்ற போது மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கிய பெண் உயிரிழந்தார்.
ஆயக்காரன் புலம் -3 , காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி புஷ்பவள்ளி (40). கூலித் தொழிலாளியான இவர், பக்கத்து கிராமமான கருப்பம்புலம் மேலக்காடு, சுப்பிரமணியன் என்பவர் வீட்டுத் தோட்டத்தில் மல்லிகைப் பூ பறிப்பதற்காக சனிக்கிழமை காலை வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த பகுதியில் செல்லும் மின் கம்பி அறுந்து புஷ்பவள்ளியின் தலையில் விழுந்ததில் மின்சாரம் தாக்கியது.
இதையடுத்து, கரும்பம்புலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு, அங்கிருந்து வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதிப்படுத்தினர்.
இது குறித்து வாய்மேடு காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.