நியூயார்க்: உலக அளவில் 10 கோடிக்கும் அதிகமான பள்ளி குழந்தைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா சபையின் தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
பெருந்தொற்றாக பரவிவரும் கரோனாவால் கல்வித்துறை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. 160க்கும் அதிகமான நாடுகளில் ஜூலை மாதத்தின் இடையில் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் உலக அளவில் 10 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது
இது குறித்து பேசிய ஐ.நா அவையின் தலைவர் அன்டோனியோ குட்டரெஸ், கரோனா பெருந்தொற்றுக்கு முன்பு உலக அளவில் 250 மில்லியன் குழந்தைகள் பள்ளி சென்று படிக்கமுடியாத நிலையே இருந்தது. ஆனால் கரோனா பெருந்தொற்று இதனை மோசமான நிலைக்கு கொண்டு சென்று ஒரு தலைமுறை பேரழிவையே ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் மூலம் கல்வி கற்றலை ஊக்குவித்தாலும், அது பெரும்பாலான மாணவர்களுக்கு சென்று சேராத நிலையே உள்ளது. உதாரணமாக கற்றலில் உள்ள குறைபாடுகள், கண்காணிப்பில் உள்ள தொய்வு போன்றவற்றால் புலம்பெயர்ந்த மாணவர்கள் கற்கமுடியாத நிலையே உள்ளது.
கரோனா முடிந்து பள்ளிகள் மீண்டும் திறந்தால், கல்வி நிதியை அதிகரித்தல், விரிவாக்கத்தை துரிதப்படுத்துதல், உள்கட்டமைப்பு ஆகியவற்றில் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் கல்வியை நவீனமயமாக்க முடியும் இவ்வாறு அவர் கூறினார்.