அயோத்தி: ராமர் கோயில் பூமிபூஜைக்கு வருகைபுரியும் பக்தர்களுக்காக ஒரு லட்சம் லட்டுகளை பாட்னா மகாவீர் அறக்கட்டளை விநியோகம் செய்ய உள்ளது.
அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக நாளை (புதன்கிழமை) பூமிபூஜை நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், ஏராளமான பக்தர்கள் வருகை புரிய தொடங்கியுள்ளனர்.
இதனையொட்டி பூமி பூஜைக்காக வரும் பக்தர்களுக்கு லட்டுகளை வழங்க பாட்னாவின் மகாவீர் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.
இது குறித்து அந்த அறக்கட்டளையின் அறங்காவலர் ஆச்சார்யா கிஷோர் பேசியதாவது, ராமர்கோயில் பூமிபூஜைக்காக வரும் பக்தர்களுக்கு ஒருலட்சம் லட்டுகளை தயாரித்து வருகிறோம். இதில் 51,000 லட்டுகள்
ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிடம் ஏற்கனவே வழங்கப்பட்டது. எஞ்சிய லட்டுகள் பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் வைத்து வழங்குவோம் என்று கூறினார்.