ராமேசுவரம், ஆக.04: ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்கள் ஒரு படகுடன் செவ்வாய்கிழமை மாயம், தேடும் பணியில் சக மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து திங்கட்கிழமை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்வளத்துறை அனுமதி பெற்று மீன்பிடிக்க சென்றனர்.
இந்நிலையில், செவ்வாய்கிழமை காலையில் படகுகள் கரை திரும்பிய நிலையில் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர் பாக்கியம் என்பவரது விசைப்படகு மட்டும் கரை திரும்பவில்லை, படகில் இருந்து 7 மீனவர்களுடன் படகு மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, மாயமான படகு மற்றும் 7 மீனவர்களை தேடி இரண்டு விசைப்படகுகளில் 10 க்கும் மேற்பட்ட மீனவர்கள் சென்றுள்ளனர். ஆனால் கடலில் காற்று வீசுவதால் கடல் அலை அதிகளவில் காணப்படுகிறது.
இதனால் மாயமான படகு மற்றும் 7 மீனவர்களை விரைந்து தேடி கண்டு பிடிக்க விமானம் பயன்படுத்த வேண்டும் என மீனவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதே போன்று கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நான்கு மீனவர்களுடன் மாயமான விசைப்படகை மீட்க அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் படகு கவிழ்ந்து நான்கு மீனவர்கள் உடல்கள் கரை ஒதுங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடதக்கது.
இதனால் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹோவர்கிராப்ட், ஹெலிகாப்டர் மூலம் தேட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.