ஹைதராபாத்: ராமர் கோயில் பூமிபூஜையில் பங்கேற்றதன் மூலம் பதவிப்பிரமாணத்தை மோடி மீறிவிட்டதாக ஹைதராபாத் மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி குற்றம் சாட்டியுள்ளார்.
அயோத்தியில் ராமர்கோயில் கட்டுமானப் பணிகளுக்கான பூமிபூஜை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இது குறித்து அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி பேசியதாவது, இந்தியா மதச்சார்பின்மை கொண்ட நாடு. இத்தகைய நாட்டில் ராமர் கோயில் பூமிபூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரதமர் நரேந்திரமோடி பகிரங்கமாக பதவிப்பிரமாணத்தை மீறியுள்ளார். ராமர் கோயிலுக்கு பூமிபூஜை செய்யப்பட்ட இந்த தினம், ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் தோற்ற தினம். இந்துத்துவா வென்ற தினம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், ராமர் மீது கொண்ட நம்பிக்கையால் பிரதமர் நரேந்திர மோடி இன்று உணர்ச்சிவசப்பட்டதாக மேடையில் கூறினார். நானும் அந்த அளவுக்கு இன்று உணர்ச்சிவசப்பட்டேன். ஏனென்றால் நான் சகமனித வாழ்வு மற்றும் சம உரிமையின்மீது நம்பிக்கை கொண்டுள்ளேன்.
பிரதமர் மோடி ராமர் கோயில் பூமிபூஜையில் கலந்துகொள்ளக் கூடாது எனக் கூறினேன். ஏனென்றால் மதச்சார்பின்மை கொண்ட நாட்டில் ஒருமதம் சார்ந்த பூமிபூஜை நிகழ்ச்சியில் மட்டும் பிரதமர் கலந்துகொள்வதால் அந்த மதம் சார்ந்த நம்பிக்கைகளை மட்டுமே பெரும்பான்மையானோர் நம்பவேண்டும் என்ற நிலை உருவாகிறது.
நாட்டிற்கு மதம் இல்லை. இந்தியாவும், அதனை ஆளும் அரசும் மதத்தை கொண்டுள்ளதா?. மோடி இஸ்லாமியர்களுக்கும், சீக்கியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் கூட பிரதமர் தான். அதனால் பிரதமராக இத்தகைய செயல்களில் அவர் (நரேந்திர மோடி) ஈடுபடக்கூடாது இவ்வாறு ஒவைசி பேசினார்.