அயோத்தி: நவீன இந்தியாவின் புதிய துவக்கம் இன்று தொடங்கியுள்ளதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் பூமிபூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் உரையாற்றியதாவது, இந்த உலகமே ஒரு குடும்பத்தை சேர்ந்தது என்பதை நம் நாடு நம்புகிறது. பலர் பூமிபூஜை நிகழ்ச்சிக்கு வராமல் தியாகம் செய்துள்ளனர். அவர்களது உடல் மட்டுமே இங்கு இல்லை, ஆனால் அவர்களின் சிந்தனை எல்லாம் இங்குதான் உள்ளன. அத்வானியால் பூமிபூஜை நிகழ்ச்சியில் பங்குபெற முடியவில்லை. ஆனால் இந்த நிகழ்ச்சியை அவர் தொலைக்காட்சி வாயிலாக கவனித்துக்கொண்டுதான் இருப்பார். இங்கு வருகை புரிந்துள்ளள ஒருசிலருக்கும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக அழைப்பு விடுக்கப்படவில்லை என்றார்.
பூமி பூஜையால் நாடு முழுவதும் மகிழ்ச்சி அலை வீசிக்கொண்டு இருக்கிறது. நமது சுய மதிப்பை மதிப்பீடு செய்துகொள்ளும் அளவுக்கு தன்னம்பிக்கை வளர்ந்துள்ளது. பூமிபூஜையால் அனைவரையும் அழைத்துச் செல்வதற்கான அடித்தளம் இன்று அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், நாங்கள் ஒரு தீர்மானத்தை எடுத்திருந்தோம். ராமர் கோயிலுக்காக 20 முதல் 30 ஆண்டுகளுக்கு போராட வேண்டும் என அப்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவர் பாலாசாகேப் தியோரஸ் எங்களிடம் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. தற்போது 30 ஆண்டுகளாக நடைபெற்று வந்த போராட்டம் மகிழ்ச்சிகரமான முடிவுக்கு வந்து எங்கள் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது என மோகன் பாகவத் தெரிவித்தார்.