புதுச்சேரி: புதுச்சேரியில் கரோனா தொற்றுக்கு மேலும் 5 போ் பலியாகினா். மேலும், புதிதாக 195 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன்குமார் கூறியதாவது:
புதுச்சேரியில் வியாழக்கிழமை 940 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 195 பேருக்கு (20.7 சதவீதம்) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,621 ஆக உயர்ந்துள்ளது. இதில், 126 பேர் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியிலும், 35 பேர் ஜிப்மரிலும், 15 பேர் கொவைட் கேர் சென்டரிலும், 19 பேர் காரைக்காலிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியால்பேட்டை திருவள்ளூவர் நகரை சேர்ந்த 62 வயது மூதாட்டி, சாரம் ஞானபிரகாசம் நகரை சேர்ந்த 55 வயது பெண், முதலியார்பேட்டையைச் சேர்ந்த 75 வயது முதியவர், அரியாங்குப்பம் ஆர்கே நகரை சேர்ந்த 77 வயது முதியவர், கொசப்பாளையத்தை சேர்ந்த 80 வயது முதியவர் ஆகிய 5 பேர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தனர். இதையடுத்து, பலி எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, 1,743 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதன்கிழமை 129 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்தால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,806 ஆக அதிகரித்துள்ளது என்றார் அவர்.