கம்பம்: தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார நிலையத்திற்கு நீர் வரத்து அதிகமாக வருவதால் மின்சார உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை நிலவரப்படி 108 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நடைபெற்றது.
தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்திற்கு, அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் மின் உற்பத்தி நடைபெறுகிறது.
தற்போது தென்மேற்கு பருவமழை எதிரொலியாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், லோயர் கேம்பில் உள்ள மின்சார உற்பத்தி நிலையத்தில் மூன்றாவது மின்னாக்கி மட்டும் இயக்கப்பட்டு 22 மெகாவாட் உற்பத்தி தொடங்கியது.
ஆகஸ்ட் 2 மற்றும் 3 இல் 27 மெகாவாட்டாகி, ஆக. 4 இல் 600 கன அடி நீர் மூலம் முதல் மின்னாக்கி, மூன்றாவது மின்னாக்கியில் தலா 27 மெகாவாட் என மொத்தம் 54 மெகா வாட் மின் உற்பத்தியாக உயர்ந்தது. இதே மின்னாக்கி மூலம் புதன்கிழமை (ஆக. 5) 40 மற்றும் 42 மெகாவாட் என 82 மெகாவாட்டாக மின் உற்பத்தி உயர்ந்தது.
நீர் வரத்து 1,200 கன அடி தண்ணீர் வருவதால் வியாழக்கிழமை 1, 2, 3 ஆகிய 3 மின்னாக்கிகள் இயக்கப்பட்டன. இதன் மூலம் தலா 36 மெகாவாட் மின் உற்பத்தி என 108 மெகா வாட்டாக மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.