கர்நாடகத்தில் ஆக்ஸ்ட் 10-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பரவி வந்த கரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூர்கள் மூடப்பட்டுள்ளன. கரோனா பெருந்தொற்று அச்சுறுத்தலால் பல மாநிலங்களில் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்கப்பட்டது.
இதனிடையே கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கர்நாடக அரசு 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்தி முடித்தது.
கரோனா பரவலுக்கு இடையே ஜூன் 5-ஆம் தேதி தொடங்கிய 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை 4-ஆம் தேதி நிறைவு பெற்றது. 2,879 தேர்வு மையங்களில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.4 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
இந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதால், ஆகஸ்ட் 10-ஆம் தேதி மாலை 3 மணி அளவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.