புணேவில் கரோனா சிகிச்சை மையத்தில் இருந்து அவசர சிகிச்சைக்காக நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இல்லாத்தால் மருத்துவரே ஆம்புலன்ஸ் ஓட்டினார்.
புணே மார்க்கெட் யார்ட் பகுதியில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் 71 வயதுடைய முதியவர் ஒருவர் சிகிச்சைப் பெற்று வந்தார். அவரது உடல்நிலை கடந்த திங்கள்கிழமை அதிகாலை 2 மணிக்கு மோசமடைந்தது.
அந்த முதியவரை உடனடியாக மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க மருத்துவர் குழு முடிவெடுத்தது. அப்போது சிகிச்சை மையத்தில் உள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் மருத்துவர் ரஞ்சீத் நிகாம் (வயது 30) ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்றார்.
இதுகுறித்து மருத்துவர் ரஞ்சீத் நிகாம் கூறுகையில், மெட்ரோ மெடிக்கல் ஃபவுண்டேஷன் என்ற மருத்துவர் குழு சார்பாக மார்க்கெட் யார்ட் பகுதியில் கரோனா சிகிச்சை மையம் நடத்தி வருகிறோம்.
அங்கு அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவரின் உடல்நிலை மோசமடைந்தது. அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் மருத்துவ முகாமிற்கு மாற்ற முடிவெடுத்தோம்.
சிகிச்சை மையத்தில் உள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு உடல்நிலை சரியில்லாத்தால் 108 சேவையை அழைத்தோம். அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. பின் வேறொரு ஓட்டுநருக்கும் தொடர்பு கொண்டோம் அவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதையடுத்து நானே ஆம்புலன்ஸை ஓட்ட முடிவெடுத்தேன். நானும் மருத்துவர் ராஜேந்திர ராஜ்புரோஹித்தும் நோயாளியை கூட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றோம். ஆனால் முதலில் சென்ற 2 மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவில் படுக்கை இல்லாததால் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தோம் என்றார்.
இதுகுறித்து நோயாளியின் மகன் கூறுகையில், எனது தந்தையின் உடல்நிலை மோசமடைந்தவுடன் தாமதிக்காமல் மருந்துவர் ரஞ்சீத் நிகாம் மற்றும் ராஜேந்திர ராஜ்புரோஹித் ஆகிய இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். இவர்கள் தான் உண்மையான் கரோனா போர் வீரர்கள் என கூறினார்.