காஞ்சிபுரத்தில் லாரியைக் கடத்தியவர்கள் கைது

ரூ.1.50 கோடி மதிப்பிலான சிகரெட் பெட்டிகள் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் ஏற்றிச் சென்ற லாரியை காஞ்சிபுரத்திலிருந்து கடத்திச் சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சிகரெட் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகளுடன் கடத்தப்பட்ட கண்டெய்னர் லாரி
சிகரெட் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகளுடன் கடத்தப்பட்ட கண்டெய்னர் லாரி

திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்திலிருந்து ரூ.1.50 கோடி மதிப்பிலான சிகரெட் பெட்டிகள் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் ஏற்றிச் சென்ற லாரியை காஞ்சிபுரத்திலிருந்து கடத்திச் சென்ற 4 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தில் உள்ள குடோனிலிருந்து 152 சிகரெட் பெட்டிகள், 60 பிஸ்கட் பெட்டிகள் உள்ளிட்ட ரூ.1.50 கோடி மதிப்பிலான பொருட்களை கண்டெய்னர் லாரியில் ஏற்றிக்கொண்டு குமார் என்ற டிரைவர் பெரம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

கண்டெய்னர் லாரியானது சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் காஞ்சிபுரம் அருகே மன்னூர் ஏரிக்கரைப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத 6 நபர்கள் லாரியை வழிமறித்து கார் ஒன்றை நிறுத்தியுள்ளனர். லாரியிலிருந்த ஓட்டுநர் குமாரை கத்தியைக் காட்டி மிரட்டி காஞ்சிபுரத்தை அடுத்த பொன்னேரிக்கரை பகுதியில் இறக்கி விட்டு லாரியை பொருட்களுடன் கடத்தி சென்று விட்டனர்.

கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தில் உள்ள தனியார் நிறுவன குடோன் மேலாளர் முரளீதரன் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. ஏ.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில் ஆய்வாளர் விநாயகம், மணிமாறன் ஆகியோர் அடங்கிய தனிப்டை குழுவினர் தீவிரமான விசாரணை மேற்கொண்டனர்.

தனிப்படை குழுவினர் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை தொடர்ச்சியாக ஆய்வு செய்து கிடைத்த தகவலின்படி கடத்தப்பட்ட கண்டெய்னர் லாரி ராணிப்பைட்டை மாவட்டம் வாலாஜா-சோளிங்கர் சாலையில் ஜம்புகுளம் என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

மேலும் லாரியை கடத்தி சென்றதாக ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த தரணிகுமார் (வயது 38), செந்தில்(34), பிரசாந்த்(26), மணிகண்டன்(40) ஆகிய 4 பேரையும் வாலாஜாபேட்டை மேம்பாலத்தின் அடியில் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையடுத்து, ரூ.1.50 கோடி மதிப்பிலான பொருள்களும் மீட்கப்பட்டன. வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரையும் தேடி வருகின்றனர். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை குழுவினரை காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் தெ.சண்முகப்பிரியா பணவெகுமதி அளித்து பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com