உலகம் முழுவதும் 2020ஆம் ஆண்டில் 17.3 கோடி மடிக்கணினிகள் விற்பனை செய்துள்ளனர்.
உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா நோய்த்தொற்றால், வீட்டிலிருந்து வேலை செய்வதற்கும், மாணவர்களின் உபயோகத்திற்கும் மடிக்கணினி முக்கிய பங்கு வகித்து வருகின்றது.
இதனையடுத்து, மடிக்கணினியின் விற்பனை கடந்தாண்டை காட்டிலும் 9 சதவீதம் அதிகரித்து, இந்திய மதிப்பில் 9.64 லட்சம் கோடி மதிப்பிலான 17.3 கோடி மடிக்கணினிகள் விற்பனை செய்துள்ளனர்.
கவுண்டர் பாயிண்ட் நடத்திய ஆய்வில், மொத்த விற்பனையில் 68 சதவீதம் லெனோவா, ஹெவ்லெட்-பேக்கார்ட் மற்றும் டெல் ஆகிய நிறுவனங்களின் மடிக்கணினிகள் மொத்த விற்பனையாகியுள்ளது.
இருப்பினும், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் உள்ள நிறுவனங்களிடையே அதிகரித்துள்ளது.
இதுகுறித்து கவுண்டர்பாயிண்ட் ஆய்வாளர் மெங்மெங் ஜாங் கூறியதாவது:
சீன நிறுவங்களான ஹவாய் மற்றும் சியோமி ஆகிய நிறுவனங்களின் வருகையால், இரண்டாம் நிலை நிறுவனங்களான ஆப்பிள், ஆசஸ் மற்றும் ஏசர் போன்றவை சமீபத்திய ஆண்டுகளில் சரிவை சந்தித்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், கரோனா பரவலால் வீட்டிலிருந்து வேலை செய்யும் கலாச்சாரமானது, 2021ஆம் ஆண்டு பல நாடுகளிலும், 2022ஆம் ஆண்டு சில ஆண்டுகளிலும் தொடரும் என்பதால் தொடர்ந்து மடிக்கணினியின் தேவை அதிகரிக்கும். 2023ஆம் ஆண்டு அதன் தேவை குறையும்.
2011-ல் உச்சத்தில் இருந்த ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டுகள் போன்றவையின் வரவால், மடிக்கணினியின் சந்தை வளர்ச்சி குறைந்தது. இருப்பினும், வணிக பயன்பாட்டின் தேவைக்காக, கடந்த சில ஆண்டுகளாக உலகளாவிய மடிக்கணினியின் நிலையான ஏற்றுமதி 160 கோடியாக இருக்கின்றது எனக் கூறினார்.
ஹவாய் மற்றும் சியோமி போன்ற நிறுவனங்கள் ஸ்மார்ட் போன் தயாரிப்பில் வெற்றியடைந்துள்ள நிலையில், தற்போது மடிக்கணினி சந்தையில் விரிவான இடத்தை பிடிக்கத் தொடங்கியுள்ளன.
எதிர்காலத்தில், விளையாட்டுகள், கிராஃபிக் ரெண்டரிங் மற்றும் தரவு செயலாக்கம் போன்ற கடினமான பயன்பாடுகளுக்கு உபயோகிக்கும் வகையிலான மடிக்கணினிகளின் வரவு இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என ஜாங் கூறியுள்ளார்.