கடையநல்லூர்: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே திங்கள்கிழமை காலை ஆம்னி பேருந்து மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
கொல்லத்தை சேர்ந்த சிலர் காரில் வேளாங்கண்ணி சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கொல்லம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். வாசுதேவநல்லூர் அருகே ஒத்தக்கடை பகுதியில் கார் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததாம். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லையாம். இதை யடுத்து இரண்டு பேரைத் தவிர மற்றவர்கள் ஊருக்கு சென்று விட்டார்களாம்.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை பள்ளத்தில் விழுந்த காரை ரெக்கவரி வாகனம் மூலம் மீட்கும் பணி நடைபெற்றதாம். பள்ளத்திலிருந்து காரை எடுத்து சாலையோரத்தில் நிறுத்திவிட்டு காரின் ஓரத்தில் நின்று அனைவரும் பேசிக் கொண்டிருந்தார்களாம்.
அப்போது கோயம்புத்தூரில் இருந்து தென்காசி நோக்கி சென்றுகொண்டிருந்த ஆம்னி பஸ் காரை இடித்து விட்டு அருகில் நின்றவர்கள் மீது மோதியதாம்.
இதில், கொல்லத்தைச் சேர்ந்த தாமஸ்குட்டி மகன் தாமஸ் (30), நினைன் மகன் ஜின்சு(33) , மற்றும் ரெக்கவரி வாகனத்தில் வந்த சிவகாசியை சேர்ந்த ராஜசேகர் (36)ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
வாசுதேவநல்லூர் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஆம்னி பேருந்தின் ஓட்டுநரான கோவில்பட்டி ஜெயபிரகாஷை கைது செய்தனர்.