புதுதில்லி: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை வெள்ளிக்கிழமை தில்லி 10 ஜன்பாத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார்.
"மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தாக்கரே மகாராஷ்டிரா முதல்வராக ஆன பிறகு இருவருக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும்.
காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து அரசு அமைத்தற்குப் பிறகும் சிவசேனா தனது நீண்டகால நட்பு கட்சியான பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டது.
சோனியா காந்தி - முதல்வர் உத்தவ் தாக்கரே சந்திப்பு "மரியாதைக்குரிய சந்திப்பு" என்று மகாராஷ்டிரா அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான் தெரிவித்திருந்தார்.
தாக்கரே - பிரதமர் மோடி சந்திப்பு: சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத், பிரதமர் மோடியுடன் முதல்வர் உத்தவ் தாக்கரே சந்திப்பு குறித்து டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே வெள்ளிக்கிழமை தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். இது அவர்களுக்கு இடையேயான ஒரு முறையான சந்திப்பு, இந்த சந்திப்பு குறித்து எந்த ஊகங்களும் தேவையில்லை. ஜெய் மகாராஷ்டிரா என்று கூறியுள்ளார்.