சண்டிகரில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 3 இளம்பெண்கள் உயிருடன் எரிந்து பலியாகினர். பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பஞ்சாப்பின் சண்டிகரில் செக்டார் 32 பகுதியில் பெண்கள் தங்கும் கட்டண விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியின் முதல் தளத்தில் 19-22 வயதுடைய பெண்கள் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 2 கல்லூரி மாணவிகள் உட்பட 3 இளம்பெண்கள் உயிருடன் எரிந்து பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருவதாகவும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை சண்டிகர் காவல் கண்காணிப்பாளர் வினீத் குமார் தெரிவித்தார்.