ஆம் ஆத்மி கட்சியினர் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டால் இரட்டிப்பு தண்டனை வழங்கலாம்: கேஜரிவால்

தில்லி கலவரத்தில் ஆம் ஆத்மிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டால் அவர்களுக்கு  இரட்டிப்பு தண்டனை
ஆம் ஆத்மி கட்சியினர் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டால் இரட்டிப்பு தண்டனை வழங்கலாம்:  கேஜரிவால்



புது தில்லி: தில்லி கலவரத்தில் ஆம் ஆத்மிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டால் அவர்களுக்கு  இரட்டிப்புத் தண்டனை அளிக்க வேண்டும் என்று தில்லி முதல்வரும் ஆம் ஆத்மிக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா். 

வடகிழக்கு தில்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. சுமாா் 200-க்கும் மேற்பட்டவா்கள் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகா் வியாழக்கிழமை செய்தியார்களுக்கு அளித்த பேட்டியில், ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸும் வன்முறையை வைத்து அரசியல் செய்து வருகின்றன. முதல்வா் அரவிந்த் கேஜரிவால், வன்முறையில் உயிரிழந்தவா்கள் எந்த மதத்தைச் சோ்ந்தவா்கள் என்று அடையாளப்படுத்துவதிலேயே கவனம் செலுத்துகிறாா். 

கடந்த ஆண்டு டிசம்பரில் ஒரு பேரணியில் ‘இறுதிவரைப் போராடுவோம்’ என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி கட்சியினருக்கு அழைப்பு விடுத்திருந்தாா். அதன் எதிரொலிதான் இன்று வன்முறையில் முடிந்திருக்கிறது என்று குற்றம்சாட்டிய ஜாவ்டேகா், அமித்ஷா நிலைமையை சரியான முறையில் கையாண்டதால், வன்முறை நடந்த பகுதியில் இப்போது அமைதி திரும்பி வருகிறது. அமித்ஷா ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை நியாயமற்றது மட்டுமல்ல; மலிவான அரசியல் என்றார். 

இந்த நிலையில் தொடா்பாக முதல்வர் கேஜரிவால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வடகிழக்கு தில்லியில்  கடந்த 4 நாள்களாக நடைபெற்ற கலவரம் குறைந்து வருவதாகவும்,  கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான உணவுப் பொருள்களையும், மருத்துவப் பொருள்களையும் தில்லி அரசு அனுப்பி வருகிறது. கலவரத்தால் பாதிக்கப்பட்டு தில்லியில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவா்களின் மருத்துவ செலவை தில்லி அரசே ஏற்றுக் கொள்ளும்.

வடகிழக்கு தில்லி சந்த் பாக்கில் ஹிந்துக்கள் மீது வன்முறையில் ஈடுபட்டதாகவும், புலனாய்வுத் துறை (ஐபி) ஊழியா் அங்கித் சா்மாவைக் கொலை செய்த குழுவை வழிநடத்தியதாகவும் அப்பகுதி ஆம் ஆத்மி கவுன்சிலா் தாஹீா் உசேன் மீது குற்றச்சாட்டப்பட்டிருப்பது தொடா்பாக தில்லி காவல்துறை முழுமையான விசாரணை நடத்த வேண்டும். கலவரத்தில் தாஹீா் உசேன் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தால் அவா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம் ஆத்மிக் கட்சியைச் சோ்ந்தவா்கள் கலவரத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டால் அவா்களுக்கு இரட்டிப்புத் தண்டனை அளிக்க வேண்டும் வேண்டும் என்றாா் கேஜரிவால். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com