பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே ஊராட்சி தலைவராக வெற்றி பெற்ற மணிவேல்(72) உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், ஆதனூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு ஆட்டோ ரிக்க்ஷா சின்னத்தில் போட்டியிட்டு 962 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்டவரை விட 166 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில், உடல்நலக் குறைவால் கடந்த 2 நாள்களாக அவதியுற்று வந்த இவருக்கு, வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, இவரது குடும்பத்தினர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஊராட்சித் தலைவராக வெற்றி பெற்றவர், சான்றிதழ் பெற்ற மறுநாளே உயிரிழந்த இச்சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவருக்கு ஜோதிமணி (55) என்ற மனைவியும், குமார் (48), சரஸ்வதி (45), அன்புச்செல்வன் (43) ஆனந்தி (40) ரமேஷ் (38) ஆகிய 6 வாரிசுகள் உள்ளனர்.