தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் வாக்கு எண்ணும் மையத்தில் ஆசிரியர்கள் தரையில் அமர்ந்து நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை கைவிட்டு, தற்போது வாக்கு எண்ணும் பணி திரும்பியுள்ளனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில், 170க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டனர். வாக்கு எண்ணும் பணி முடிவடையும் நிலையில் , ஒரு முதுகலை ஆசிரியர், சக ஆசிரியர்களிடம் வாக்கு எண்ணும் பணி முடிந்தும் அதற்கான மதிப்பூதியம் தராமல் தாமதம் செய்கிறார்களே என்று பேசிக் கொண்டிருந்தாராம். அதற்கு அருகே நின்று கொண்டிருந்த அதிமுகவைச் சேர்ந்த ஒருவர், அந்த ஆசிரியரை சரமாரித் திட்டி, தாக்கி விட்டு தப்பியோடி விட்டார். அதனைக் கண்டித்தும், ஆசிரியரைத் திட்டியவர், தங்களிடம் வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தர்ணாப் போராட்டத்தில் 40 நிமிடத்திற்கு மேலாக ஈடுபட்டு வந்தனர். அவர்களிடம் கெங்கவல்லி வட்டார தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில், மற்றும் கெங்கவல்லி காவல் ஆய்வாளர் ராம் ஆண்டவர் உள்ளிட்டோர் ஆசிரியர்களிடம் சமரசம் செய்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு வாக்கு எண்ணும் பணிக்கு திரும்பியுள்ளனர். ஆசிரியர்களின் போராட்டத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.