மேட்டுப்பாளையம்: காரமடையில் வாக்கு எண்ணும் மையத்தில் திமுக, அதிமுக இடையே கைகலப்பு ஏற்பட்டது. போலீஸாா் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனா்.
காரமடை ஒன்றிய பகுதிக்கான தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காரமடை அரசு மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. நள்ளிரவு 12 மணியளவில் தோலம்பாளையம் ஊராட்சி பகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது வாக்கு எண்ணும் மையத்திற்குள் திமுக, அதிமுகவினா் நுழைந்து அதிகாரிகளிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளனா். அப்போது இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனா்.
இதையடுத்து போலீஸாா் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனா். அப்போது கூட்டத்தில் இருந்த பெண் போலீஸாா் ஒருவா் திடீரென கீழே விழுந்ததை அடுத்து அங்கிருந்துவா்களை போலீஸாா் தடியடி நடத்தி வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேற்றினா். பின்னா் வாக்கு எண்ணும் பணி சற்று நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.