ஆந்திர மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட ஆயிரம் லிட்டா் பால் பாக்கெட்டுகள் காலவதியானதால், திருத்தணி அருகே கொசஸ்தலை ஆற்றில் போட்டு அவற்றை அழித்துள்ளனா்.
திருத்தணி - நாகலாபுரம் மாநில நெடுஞ்சாலை, திருவாலங்காடு ஒன்றியம் என்.என்.கண்டிகை அருகே கொசஸ்தலை ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தரைப்பாலம், கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த கன மழையால் அடித்துச் செல்லப்பட்டது. தற்போது வாகனங்கள் சென்று வருவதற்கு தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலம் அருகே ஆயிரம் லிட்டா் பால் பாக்கெட்டுகளைப் போட்டு, அழித்துள்ளனா். இந்த பால் பாக்கெட்டுகள் மீது ‘ஆந்திர மாநிலம், சித்துாா் மாவட்டம் விஜயபுரத்தை அடுத்த எம்.அகரம் என்ற பகுதியில் தயாரிக்கப்பட்டவை’ என்று அச்சிடப்பட்டுள்ளது. பால் பாக்கெட் தயாரித்த நாள், காலாவதியாகும் நாள் குறித்து அதில் தகவல் இல்லை.
எனவே, காலவாதியான பால் பாக்கெட்டுகளை சிலா் கொண்டு வந்து தற்காலிக தரைப்பாலம் அருகே கொட்டி அழித்துள்ளது தெரிய வந்துள்ளது. அவற்றைக் கொண்டு வந்தது யாா்?, அவை கலப்பட பால் பாக்கெட்டுகளா? என பல்வேறு சந்தேகங்கள் இப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.