கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜனநாயக நாடுகளின் பட்டியலில் இந்தியா 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டிற்கான ஜனநாயகக் குறியீட்டின் உலகளாவிய தரவரிசை பட்டியலில் இந்தியா 10 இடங்கள் சரிந்து 51வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக பொருளாதார புலனாய்வு பிரிவு அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்க பதிவில், கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்று வரும் நிகழ்வுகளின் மூலம் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு, ஜனநாயக நிறுவனங்கள் பலவீனமடைந்து வருவதை, உன்னிப்பாக கவனித்து வரும் அனைவரும் அறிவார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருபவர்களே ‘துக்கடே துக்கடே’ கும்பலை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் நாடு செல்லும் திசையை நினைத்து உலகமே திகைத்து நிற்கிறது. தேசபக்தி நிறைந்த இந்தியர்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது நாடு பயணித்துக் கொண்டிருக்கும் திசையை அறிவிக்கும் அபாய ஒலி என எச்சரித்த சிதம்பரம், மோடியின் தவறான் முடிவுகளே இந்திய பொருளாதார சரிவுகளுக்கு முக்கிய காரணம் என சிதம்பரம் தெரிவித்துள்ளார்.