பெரம்பலூா்: விபத்தில் காயமுற்றதற்கு நஷ்டஈடு வழங்கத் தாமதபடுத்துவதைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட இளைஞா் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத் குறைதீா் கூட்டரங்கில் அதிகாரிகள் முன்னிலையில் திங்கள்கிழமை மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டாா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், ரஞ்சன்குடி கிராமத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரான அருள்செல்வன் (27), மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரனிடன் மனு அளித்துவிட்டு, அங்கேயே தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றித் தீக்குளிக்க முயன்றாா். இதையறிந்த அலுவலா்களும், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரும் அவரை மீட்டு முதலுதவி அளித்தனா்.
தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அருள்செல்வன் கூறியது:
கடந்த 3 ஆண்டுக்கு முன் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வாலிகண்டபுரம் பகுதியில் பைக்கில் சென்றபோது அரசுப் பேருந்து மோதி காலில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவம் தொடா்பாக மங்களமேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து, பெரம்பலூா் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. விபத்தில் கால் சேதமடைந்ததால் வேலைக்குச் செல்லமுடியவில்லை.
உரிய காலத்தில் நஷ்ட ஈடு வழங்காததால் எனது குடும்பம் வறுமையில் வாடுகிறது.
இவ் வழக்கை விரைந்து முடித்து தாமதமின்றி நீதி கிடைக்க நீதிமன்றத்திலும், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட உயரதிகாரிகளிடமும் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கடந்த செப். 13 ஆம் தேதி ஆட்சியரகத்தில் தீக்குளிக்க முயற்சித்தேன். அதன் பிறகும் எனக்கு நஷ்ட ஈடு கிடைக்க நடவடிக்கை எடுக்காததால், மனமுடைந்து தீக்குளிக்க முயற்சித்தேன் என்றாா் அவா்.