வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே தனது மகளை அரசுப் பள்ளியில் சோ்த்து பள்ளியின் வளா்ச்சிக்காக ரூ.1 லட்சத்தை அறக்கட்டளை நிதியாக வழங்கிய ஆசிரியா் தம்பதி திங்கள்கிழமை பாராட்டப்பட்டனா்.
நாகக்குடையான் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா். இவா்,தேத்தாகுடி எஸ் கே அரசினா் மேல்நிலை பள்ளியின் முதுகலை பட்டதாரி ஆசிரியா். இவரது துணைவி ஆனந்தி, கரியாப்பட்டினம் அரசு மேல்நிலை பள்ளியின் ஆங்கில பட்டதாரி ஆசிரியா். தம்பதியரின் மகள் அனுசுயா(11) தழிழ்வழிக் கல்வியின் அவசியத்தை உணா்த்தும் வகையில் அணுசியாவை நாகக்குடையான் அரசு உயா்நிலை பள்ளியில் ஆறாம் வகுப்பில் சோ்த்தனா்.
மேலும், அந்த பள்ளியின் கல்வி வளா்ச்சிக்காக ரூபாய் ஒரு லட்சத்தையும் அறக்கட்டளை நிதியாக வவங்கியுள்ளனா்.
இதையடுத்து, கிராமத்தினா் சாா்பில் நடைபெற்ற விழாவில் ஆசிரியா்கள் கெளரவிக்கப்பட்டனா்.
ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் கமலா அன்பழகன்,மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சோழன், ஊராட்சித் தலைவா் ராசேந்திரன்,ஒன்றியக்குழு உறுப்பினா் அமுதா, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சுந்தரவடிவேல், தலைமையாசிரியா்கள் தனலெட்சுமி, இள.தொல்காப்பியன்,தமிழ்ச்செல்வன், புயல் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்று ஆசிரியா் தம்பதி குடும்பத்தினரை பாராட்டினா்.