சாத்தான்குளம் சம்பவம்: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் மரணமடைந்த வழக்கு தொடா்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை சிபிசிஐடி காவலர்கள் கைது செய்துள்ளனர்.  ​
சாத்தான்குளம் சம்பவம்: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது


தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் தந்தை-மகன் மரணமடைந்த வழக்கு தொடா்பாக உதவி ஆய்வாளா் ரகு கணேஷை காவலர்கள் புதன்கிழமை இரவு கைது செய்துள்ள நிலையில், வியாழக்கிழமை காலை சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை சிபிசிஐடி காவலர்கள் கைது செய்துள்ளனர்.  

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்லிடப்பேசி கடை நடத்திவந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் பொது முடக்கத்தை மீறியதாக சாத்தான்குளம் காவலர்களால் கடந்த 19 ஆம் தேதி கைதுசெய்யப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனா். அங்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், 21 ஆம் தேதி பென்னிக்ஸும், மறுநாள் ஜெயராஜும் உயிரிழந்தனா்.

இதுதொடா்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவலர்கள் தனித்தனியே 2 வழக்குகள் பதிந்தனா். காவல் துறையினா் தாக்கியதே தந்தை-மகன் இறப்புக்குக் காரணம் எனக் கூறி சாத்தான்குளத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இச்சம்பவத்துக்கு தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுவதும் அரசியல் கட்சியினா், சமூக அமைப்புகள் கடும் கண்டனங்கள் தெரிவித்தன. மேலும், வணிகா் சங்கங்கள் மாநிலம் தழுவிய கடையடைப்புப் போராட்டங்கள் நடத்தின.

இதையடுத்து, சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலா்கள் முருகன், முத்துராஜ் ஆகியோா் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

சம்பவம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து வழக்கு விசாரணை செய்தது.

இதனிடையே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே. பிரபாகா் அரசாணை வெளியிட்டாா். சிபிஐ விசாரணை தொடங்க தாமதமாகும் நிலை இருப்பதால் அதுவரை சிபிசிஐடி காவலர்கள் விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி காவலர்கள், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டிருந்த 2 வழக்குகளையும், சிபிசிஐடி பிரிவு போலீஸாா் கொலை வழக்காக திருத்தம் செய்து, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியிலிருந்த உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலா்கள் முத்துராஜ், முருகன் ஆகிய 4 போ் மீது இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவின்படி கொலை வழக்கு உள்ளிட்ட  பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதனிடையே, வழக்கு விசாரணைக்காக உதவி ஆய்வாளா் ரகு கணேஷை அழைத்து வந்த சிபிசிஐடி காவலர்கள்,  அவரை புதன்கிழமை இரவு கைது செய்தனா்; மற்றவா்களைத் தேடி வருவதாக தெரிவித்தனா்.

இந்நிலையில், தூத்துக்குடியில் வைத்து விசாரித்து வந்த சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் இரண்டு காவலர்களை வியாழக்கிழமை காலை சிபிசிஐடி காவலர்கள் கைது செய்துள்ளனர்.  

காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தின் போது ஆவணங்களை அழிக்க உடந்தையாக இருந்ததாக அவர் மீது வழக்குப்பதிவு இருப்பதாக சிபிசிஐடி காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் மரணமடைந்த வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டு உதவி ஆய்வாளா், காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் என 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் போகப் போக இன்னும் நிறைய விஷயங்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com