திருச்சி: தமிழக அரசின் உத்தரவுப்படி அமல்படுத்தப்பட்ட முழு முடக்கத்தால் திருச்சி மாவட்டம் முழுவதும் முற்றிலும் முடங்கியுள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு முடக்கம் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் இந்த உத்தரவு அமலாகியுள்ளது. இதன்கராணாக திருச்சி மாநகரம், உறையூர், திருவானைக்கா, சமயபுரம், திருவரங்கம், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், திருவெறும்பூர், உப்பிலியபுரம், முசிறி, துறையூர், தா.பேட்டை, மருங்காபுரி என மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக கடைகள் திறக்கப்படவில்லை. பெட்ரோல் விற்பனை நிலையங்களும் இயங்கவில்லை. மருத்துவமனைகள், மருந்துக்கடைகள் மட்டுமே திறந்திருந்தன. பேருந்து, ரயில், ஆட்டோ, வாடகை கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இயக்கப்படவில்லை.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்.
மாநகரின் அடையாளமான மலைக்கோட்டை, காவிரி பாலம், கொள்ளிடம் பாலம் மற்றும் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. மக்கள் நடமாட்டமும் இல்லை. ஒரு சில இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்வதை காணமுடிந்தது.
திருச்சியில் வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்.
தேநீரகங்கள் மற்றும் உணவகங்களும் திறக்கப்படவில்லை. அம்மா உணவகங்கள் மட்டுமே வழக்கம்போல இயங்கின. திங்கள்கிழமை அதிகாலை 6 மணி வரையில் இந்த முழு முடக்கம் அமலில் உள்ளது.