கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணிக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் கரோனா நோய்த் தொற்றின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட, மாநகராட்சி, சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக ஆட்சியர் தினமும் கரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள், காய்கறி, மீன் சந்தைகளில் ஆய்வு செய்து வந்தார். தவிர நாள்தோறும் 100க்கும் மேற்பட்டோர் பல்வேறு காரணங்களுக்காக ஆட்சியரை சந்தித்து வந்தனர்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் கு.ரசமணிக்கு இரண்டு நாள்களாக காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். இங்கு மேற்கொண்ட பரிசோதனையில் ஆட்சியர் கு.ராசாமணிக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆட்சியரின் அலுவலக அறை அடைக்கப்பட்டுள்ளது. தவிர குடும்ப உறுப்பினர்கள், உடன் பணியாற்றியவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.