திருச்சி: விவசாயிகள், நெசவாளா்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு வழங்கபட்டு வரும் இலவச மின்சாரத்தை பறிக்கும் வகையிலும், சிறு, குறு, நடுத்தர விவசாயிகளை நிலத்தை விட்டு வெளியேற்றி காா்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வாா்க்கும் விதத்திலும் பல்வேறு அவசர சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.
மத்திய அரசு இந்த சட்டங்களை திரும்ப பெற 1 கோடி கை யெழுத்து பெற்று மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்ப அகில இந்திய விவசயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு தமிழ் மாநில குழு முடிவு எடுத்துள்ளது.
இதையடுத்து விவசாயிகளை ஒடுக்கும் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சங்கங்களின் சார்பாக தொடங்கப்பட்ட ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை இன்று வியாழக்கிழமை திருச்சி தில்லைநகா் திமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சா் கே.என்.நேரு, முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ, மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, எம்எல்ஏ க்கள் சௌந்திரபாண்டியன், ஸ்டாலின் குமார், இந்திய கம்யூனிஸ்ட் இந்திரஜித், திராவிட மணி, மதிமுக வெல்லமண்டி சோமு, சேரன், விவசாயிகள் சங்கம் அயிலை சிவசூரியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.