மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று பரிசோதனை தினமும் 4000 முதல் 5000 பேருக்கு எடுக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சிகாரர்கள் மக்களிடையே பீதியை கிளப்ப வேண்டாம் எனஅமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஜூன் 24 முதல் ஜூலை 14 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
பரவை காய்கறி சந்தை பகுதியில் கரோனா நோய்த் தொற்று அதிக அளவில் பரவுவதால், அதனை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் பெரிய காய்கறி சந்தையான பரவை காய்கறி சந்தை பகுதியில் கரோனா நோய்த் தொற்று அதிக அளவில் பரவுவதால், அதனை தற்காலிகமாக பெருங்குடி விமான நிலையம் அருகே உள்ள பகுதியில் மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வில், ஆட்சியர் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன் ,வட்டாட்சியர் நாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியது:
கரோனா தொற்று குறித்து மக்கள் பயப்படும் வகையில் யாரும் பேச வேண்டாம். மதுரை மாவட்டத்தில் தினமும் 4000 முதல் 5000 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது.
மதுரையில் சில நாட்களுக்கு முன் பரிசோதனை செய்தவர்களில் 13 சதவீதமாக இருந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, தற்போது 10 சதவீதமாக குறைந்துள்ளது.
கரோனா தொற்று மதுரையில் அதிகமாக பரவுகிறது என எதிர்கட்சியினர் வீண் வதந்தியை பரப்புகிறார்கள் ஆனால் அவர்கள் மக்களுக்காக எந்த நன்மையையும் செய்யவில்லை.
நேற்று கூட இரண்டு மாவட்ட ஆட்சியர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. துரதிஷ்ட வசமானது.
முன்கள பணியாளர்களான மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் தொற்றை எதிர்கொள்வதற்காக தான் களத்தில் நின்று மக்களை காத்து கொண்டிருக்கின்றனர்.
நான்கு சுவருக்குள் இருந்து கொண்டு ஆய்வுகளையும், கூட்டங்களையும் நடத்திவிட்டு பாதுகாப்பிற்காக அறைக்குள்ளே இருப்பவர்கள் நாங்கள் அல்ல. எனவே எதிர்க்கட்சிகாரர்கள் மக்களிடையே பீதியை கிளப்ப கூடாது என்றார்.