ஏம்பல் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாக கைது செய்யப்பட்ட பூக்கடைக்காரர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் தப்பி ஓடியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தில் 7 வயது சிறுமி கடந்த ஜூன் இறுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
இச்சம்பவத்தில் பக்கத்து வீட்டுக்காரரான பூக்கடைக்காரர் ராஜா கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
தற்போது அவருக்கு ஆண்மைப் பரிசோதனை செய்வது என முடிவு செய்த ஏம்பல் காவலர்கள், புதன்கிழமை சிறையிலிருந்து அழைத்து வந்து மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
நீதிபதியின் உத்தரவைப் பெற்று ராஜாவை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கைதிகள் பிரிவில் அனுமதித்தனர்.
இந்த நிலையில் வியாழக்கிழமை காலை ராஜா கைவிலங்கை உருவிக் கொண்டு தப்பியோடிவிட்டதாக கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ராஜாவைப் பிடிப்பதற்காக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.