வனத்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்ற முதியவர் பலி: ஆலங்குளம் எம்.எல்.ஏ. தலைமையில் உறவினர்கள் போராட்டம்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முதியவரை வனத்துறை விசாரணைக்காக அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்ததையடுத்து
ஆழ்வார்குறிச்சி காவல் நிலையம் முன்பு பூங்கோதை எம்.எல்.ஏ தலைமையில் தர்ணாவில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள்.
ஆழ்வார்குறிச்சி காவல் நிலையம் முன்பு பூங்கோதை எம்.எல்.ஏ தலைமையில் தர்ணாவில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள்.

அம்பாசமுத்திரம்: தென்காசி மாவட்டம் கடையம் அருகே வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முதியவரை வனத்துறை விசாரணைக்காக அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்ததையடுத்து ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை தலைமையில் உறவினர்கள் காவல் நிலையம் முன்பு 7 மணி நேரமாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வாகைக் குளத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் அணைக்கரை முத்து(65). விவசாயியான இவர் தோட்டத்தில் காய்கறி பயிரிட்டுள்ளார். இந்நிலையில் இவர் தோட்டத்தைச் சுற்றிலும் மின் வேலி அமைத்திருந்ததாக வந்தத் தகவலையடுத்து கடையம் வனத்துறையினர் புதன்கிழமை இரவு விசாரணைக்காக அழைத்துச் சென்றனராம்.

இந்நிலையில், அணைக்கரை முத்துவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வனத்துறையினர் அவரை உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனெவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். 

இது குறித்த தகவல் அறிந்ததும் அணைக்கரை முத்து உறவினர்கள் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையம் முன்பு திரண்டனர். காலை 6 மணி முதல் காவல் நிலையம் முன்பு உறவினர்கள் திரண்டிருந்த நிலையில் தென்காசி காவல்துணைக் கண்காணிப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன், பாலாஜி உள்ளிட்டோர் வனத்துறை பொறுப்பில் இருந்த நிலையில் இறந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று திரண்டிருந்தவர்களிடம் கூறினர். 

இந்நிலையில், அங்கு வந்த ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை தலைமையில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் காவல் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை கூறும் போது, இந்த சம்பவத்தில் தொடர்புடைய வனத்துறையினரை அழைத்து விசாரணை நடத்த வேண்டும். மேலும் மாஜிஸ்திரேட் அறிக்கை வரும் வரை இங்கிருந்து கலைய மாட்டோம் என்றார்.

தொடர்ந்து மக்கள் திரண்டு வருவதால் அங்கு பதற்றம் அதிகரித்து வருவதை அடுத்து அந்தப்பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com