வெள்ளக்கோவில் அருகே செவ்வாய்க்கிழமை உயிருக்குப் போராடிய அரிய வகை வெள்ளை ஆந்தை தன்னார்வலர்களால் மீட்கப்பட்டது.
வெள்ளக்கோவில் மூலனூர் சாலையிலுள்ள சுப்ரமணியகவுண்டன்வலசு அருகில் மின்சாரம் தாக்கி ஆந்தை ஒன்று உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததை அப்பகுதியைச் சேர்ந்த ஹரிக்குமார் என்பவர் பார்த்துள்ளார்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் தன்னார்வலர்கள் ராஜ்குமார், நாகராஜ் இருவரும் அதனைக் காப்பாற்ற முயற்சி செய்தனர். உடனே அங்கு சென்று பறவையை எடுத்துக் கொண்டு வெள்ளக்கோவில் அரசு கால்நடை மருந்தகத்துக்கு சென்றனர்.
அங்கு மருத்துவர் இல்லாததால், புதுப்பை அரசு கால்நடை மருத்துவர் கார்த்திக்கிடம் ஆலோசனை கேட்டனர். அவர் கூறியபடி, மாத்திரை, மருந்துகள் கொடுத்ததில் மூன்று மணி நேரத்துக்குப் பிறகு ஆந்தை சற்று சாதாரண நிலைக்கு வந்தது.
காங்கயம் வனத்துறை ஆய்வாளர் செல்வராஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது தன்னார்வலர்கள் பராமரிப்பில் இருக்கும் ஆந்தை விரைவில் காட்டுப் பகுதியில் விடப்படுமென தெரிவிக்கப்பட்டது.