திருப்பூர்: பிளஸ் 1 பொதுத் தேர்வில் 97.41 சதவீத தேர்ச்சி பெற்று தமிழக அளவில் 5 ஆவது இடத்தை திருப்பூர் மாவட்டம் பிடித்துள்ளது.
தமிழகம் முழுவதிலும் பிளஸ் 1 தேர்வானது கடந்த மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி நிறைவடைந்தது. இதில், திருப்பூர் மாவட்டத்தில் 215 பள்ளிகளைச் சேர்ந்த 11,615 மாணவர்களும், 14,007 மாணவிகள் என மொத்தம் 25,622 பேர் பிளஸ் 1 தேர்வு எழுதியிருந்தனர்.
இதில், மாணவர்கள் 11,208 பேர், மாணவிகள் 13,750 பேர் என மொத்தம் 24,958 பேர் தேர்ச்சி பெற்றனர். திருப்பூர் மாவட்டம் பிளஸ் 1 பொதுத் தேர்வில் 97.41 சதவீதம் தேர்ச்சி பெற்று தமிழக அளவில் 5 ஆவது இடத்தைப் பிடித்தது.
அதே வேளையில் கடந்த 2018-19 ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் 97.93 சதவீதமும், 2017-18 ஆண்டில் 96.4 சதவீதமும் பெற்று இரு ஆண்டுகளும் தொடர்ந்து தமிழக அளவில் 2 ஆம் இடத்தைப் பிடித்திருந்தது திருப்பூர்.
இந்த நிலையில், தற்போது மாநில அளவிலான தரவரிசைப் பட்டியலில் 3 இடங்கள் பின்தங்கியுள்ளது. மேலும், 2019 ஆம் ஆண்டில் 121 பள்ளிகளும், 2018 ஆம் ஆண்டில் 96 பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் நிகழாண்டு 103 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.