சென்னை, ஜூலை 31: மதநல்லிணக்கத்தை சிதைக்கும் வகையிலான காணொலிகளை சமூக ஊடகங்களில் பதிவிட தடை விதிக்க கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் 3 வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சார்லஸ் அலெக்ஸாண்டர் தாக்கல் செய்த மனுவில், கறுப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனல் தமிழ் கடவுள் முருகன் குறித்த கந்த சஷ்டி கவசப்பாடலை கடுமையாக விமர்சனம் செய்து காணொலி வெளியிட்டது.
இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து அந்த சேனல் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது சமூகஊடகங்களில், அரசியல் தலைவர்கள், சுந்திர போராட்ட வீரர்கள், கடவுள் உள்ளிட்டோரை அவமதிக்கும் வகையில் வெறுப்பு பிரசாரங்கள் செய்யப்படுகிறது.
இதுபோன்ற காணொலி வெளியிடக்கூடாது என ஏற்கனவே விதிகள் உள்ளன. ஆனாலும் அவ்வாறான சர்ச்சைக்குரிய காணொலி பதிவுகளை நீக்கும் நடவடிக்கைளில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுப்பது இல்லை.
எனவே மத நல்லிணக்கத்தை சிதைக்கும் சர்ச்சைக்குரிய காணொலி காட்சிகளை சமூக ஊடகங்களில் பதிவிட தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு தொடர்பாக மத்திய மாநில அரசுகள் 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.