தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலர் ராஜேந்திரன், மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜானகி ஆகியோர் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, உணவுப் பொருள்களை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் இருந்து நீங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.
குறிப்பாக விவசாயிகள் நலன் என்ற போர்வையில் வியாபாரிகளுக்கு சாதகமான திட்டங்களை, கரோனா பொது முடக்க காலத்திலுள்ள அவசர நிலையை பயன்படுத்தி அமல்படுத்தி வரும் முடிவினை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் இருந்து உணவுப் பொருள்களை நீங்கிய மத்திய அரசின் சட்ட திருத்த நகலை எரித்தனர்.
இந்த போராட்டத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலக் குழு வனஜா, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் ஒன்றியச் செயலர் அஜாய் கோஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.