திருப்பூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 20 விவசாயிகளை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் தலைமை வகித்தார். இதில், பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது:
மத்திய அரசு புதியதாக கொண்டு வந்துள்ள 1955 ஆம் ஆண்டு அத்தியாவசிய பொருள்கள் சட்ட திருத்தம், வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம் 2020, விவசாயிகளின் விலை உத்திரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்த அவசர சட்டம் 2020, மின்சார சட்ட திருத்தம் ஆகியவை விவசாயிகளை கடுமையாகப் பாதிக்கும் சட்டங்களாகும். ஆகவே, இந்த சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றனர்.
இதையடுத்து, சட்ட நகலை எரித்த 20 விவசாயிகளை திருப்பூர் தெற்கு காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.