சிதம்பரம்: தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைப் பணியாளர்களை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தமிழக அரசு உடனடியாக சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
சிதம்பரத்தில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி புதன்கிழமை முதல் கருப்பு சட்டை அணிந்து பணியாற்றும் போராட்டத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் கோ.ஜெயச்சந்திரராஜா தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் துரைசேகர், மாவட்ட துணைத்தலைவர் நரசிம்மன், நகர பொறுப்பாளர்கள் யோகராஜ், கனகசபை, தட்சிணாமூர்த்தி, சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
"நியாய விலைக் கடை பணியாளர்களை உடனடியாக தமிழக அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். இறந்து போனவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் மே, ஜூன் மாதங்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்க வேண்டும். நியாயவிலைக் கடைகளுக்கு வழங்கும் பொருள்கள் தரமானதாக இருக்க வேண்டும். 100 சதவீத காடுகளுக்கும் பொருள்கள் வழங்க வேண்டும். நியாயவிலைக் கடைப் பணியாளர்களிடம் இறக்குகூலி வசூலிக்க கூடாது.
இந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காண தமிழக அரசு முன்வர வேண்டும். அதுமட்டுமல்லாமல் இவர்களுக்கு கரோனா தொற்று முடியும் வரை முகக் கவசங்கள், கையுறை உள்ளிட்ட பொருள்களை வழங்க வேண்டும். ஏப்ரல் மாதம் சுய உதவி குழுக்கள் மூலம் நடத்தப்படும் கடைகளுக்கு பணம் வாங்கிக் கொண்டுதான் பொருட்கள் கொடுத்தார்கள். அவ்வாறு சுய உதவிக் குழுக்களுக்கு பெறப்பட்ட தொகையை திருப்பித் தர வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடை பணியாளர்களும் புதன்கிழமை முதல் கருப்பு சட்டை அணிந்து பணியாற்றி வருகிறார்கள்.
எனவே நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தமிழக அரசு தீர்வு காண முன்வர வேண்டும்" என கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.