பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து 13-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை உயா்த்தப்பட்டது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 50 காசுகள் வரையும், டீசல் 54 காசுகள் வரையும் அதிகரிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரியிலிருந்து மே மாதம் வரை விமான எரிபொருள் விலை 7 முறை குறைக்கப்பட்டிருக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 7 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அன்று முதல் தொடர்ந்து விலை ஏற்றம் கண்டும் வரும் பெட்ரோல், டீசல் விலையில் இன்று வெள்ளிக்கிழமையும் 13-ஆவது நாளாக அதிகரிக்கப்பட்டது.
சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.81.32-இல் இருந்து ரூ.81.82-ஆகவும், டீசல் ரூ.74.23-இல் இருந்து 74.77-ஆகவும் உயா்ந்தது. இந்த விலை உயர்வு வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
உள்ளூா் விற்பனை வரி, மதிப்புக் கூட்டு வரி ஆகியவை காரணமாக, விலை உயா்வு மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.
கடந்த 13 நாள்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.28 வரையும், டீசல் விலை ரூ.6.55 வரையும் விலை உயா்ந்துள்ளது.