தினமணி செய்தி எதிரொலி: அருந்ததியர் காலனிக்கு சாலை வசதி,  நிறைவேறியது 50 ஆண்டு கால கோரிக்கை

தினமணி செய்தி எதிரொலியால் 50 ஆண்டுகாலமாக அருந்ததியர் இன மக்கள் முன்வைத்த கோரிக்கை நிறைவேறி உள்ளது.
தினமணி செய்தி எதிரொலி: அருந்ததியர் காலனிக்கு சாலை வசதி,  நிறைவேறியது 50 ஆண்டு கால கோரிக்கை

தினமணி செய்தி எதிரொலியால் 50 ஆண்டுகாலமாக அருந்ததியர் இன மக்கள் முன்வைத்த கோரிக்கை நிறைவேறி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது மாதலப்புரம் கிராமம். இங்கு ஊரின் கிழக்குப் பகுதியில் அருந்ததியர் இன மக்கள் 60 குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்புகள் உள்ளது. கடந்த 50 ஆண்டுக்கும் மேலாக மக்கள் அங்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிராமத்தின் பிரதான தார் சாலையில் இருந்து அருந்ததியர் மக்கள் வசிக்கும் குடியிருப்புக்கு செல்ல சரியான பாதை வசதி இல்லாததால் தனியார் விவசாய நிலங்கள் வழியாக  நடைபாதை அமைத்து  பயன்படுத்தி வந்தனர். 

மழைக் காலங்களிலும் இரவு நேரங்களிலும் இந்தப் பாதையை பயன்படுத்துவதில்  சிக்கல் நீடித்து வந்தது. கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், தாய்மார்கள் அவசர மருத்துவ சிகிச்சைக்காக செல்வதென்றால் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை கூட பயன்படுத்த முடியாமல் நடை பயணமாக 500 மீட்டர் தொலைவுக்கு நடந்து சென்று அதன் பிறகு வாகனங்களை பயன்படுத்த கூடிய சூழல் இருந்தது. மழைக்காலங்களில் உயிரிழந்தவர்களின் சடலங்களை எடுத்துச் சென்று அடக்கம் செய்வதிலும் பல பிரச்சினைகள் நீடித்தது. 

தார் சாலை அமைக்க வலியுறுத்தி பலமுறை மனு அளித்தும் புதூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் அக்கறை செலுத்தவில்லை.  நடை பாதையாக பயன்படுத்தப்பட்ட தனியார் நிலங்களின் உரிமையாளர்கள் தார் சாலை அமைக்க தங்களது நிலத்தை தருவதற்கு முன் வந்தும் அதிகாரிகளின் மெத்தன போக்கினால் சட்டரீதியாக நிலத்தை கையகப்படுத்துவதிலும்  தார்ச்சாலை அமைப்பதிலும் இழுபறி தொடர்ந்தது.  

இதனால் ஒவ்வொரு நாளும் அருந்ததியினர் இன மக்கள் சந்தித்து வரும் அவலநிலை குறித்தும் சாலை வசதி கோரிக்கை குறித்து கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கு குறித்தும்  தினமணி ஆன்லைன் பதிப்பு (11 ஜூன் 2020) மற்றும் தினமணி நாளிதழில் (15 ஜூன் 2020) செய்தி வெளியானது. செய்தி எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவின்படி அதிகாரிகள் அப்பகுதியில் முகாமிட்டு  அருந்ததியர் காலனி குடியிருப்புக்கு பாதை அமைக்க தேவையான நிலங்களை அளவீடு செய்து நில உரிமையாளர்களிடம் இருந்து நிலத்தை பெற்று பத்திரப்பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து புதூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மூலம்  சாலை வசதி உடனடியாக ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.  

தினமணி செய்தி எதிரொலியால் 50 ஆண்டுகாலமாக அருந்ததியர் இன மக்கள் முன்வைத்த கோரிக்கை நிறைவேறி உள்ளது. அருந்ததியர் இன மக்கள் தினமணிக்கு நன்றி. சாலை வசதி கேட்டு 50 ஆண்டுகாலமாக போராடி வந்த கோரிக்கை நிறைவேறியதை அடுத்து மாதலப்புரம் கிராமத்தில் நன்றி தெரிவிப்பு கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி சைவத்துரை தலைமை வகித்தார்.  அருந்ததியர் காலனி குடியிருப்பு பிரதிநிதிகள் கருப்பசாமி, மூர்த்தி, பாரதிய கிசான் சங்க மாவட்ட தலைவர் முருகேசன், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அருந்ததியர் குடியிருப்புக்கு சாலை வசதி கிடைத்திட உதவி புரிந்த தினமணி நாளிதழுக்கும், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கும், நிலம் வழங்கிய ஜேசுராஜ், அந்தோணிராஜ், ராமலட்சுமி, முத்து, தேவராஜ், ஆண்டிச்சாமி ஆகியோருக்கும் மாதலப்புரம் அருந்ததியர் இன மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிராம நுழைவாயிலிலும் அருந்ததியர் குடியிருப்பு காலனியில் உள்ள காளியம்மன் கோயிலிலும் தினமணி நாளிதழுக்கும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கும் நன்றி தெரிவித்து டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com