அருப்புக்கோட்டையில் பட்டாசுத்திரிக் கட்டுகள் தீப்பற்றி விபத்து: கணவன், மனைவி படுகாயம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதன்கிழமை காலை வீட்டில் வைத்திருந்த பட்டாசுத் திரிக் கட்டுகள் மின் கசிவால் தீப்பற்றிய விபத்தில் கணவன், மனைவி தீக்காயங்களுடன் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிர
பட்டாசுத்திரி தீப்பற்றிய விபத்தில் எரிந்து நாசமான வீடு
பட்டாசுத்திரி தீப்பற்றிய விபத்தில் எரிந்து நாசமான வீடு


அருப்புக்கோட்டை:  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதன்கிழமை காலை வீட்டில் வைத்திருந்த பட்டாசுத் திரிக் கட்டுகள் மின் கசிவால் தீப்பற்றிய விபத்தில் கணவன், மனைவி தீக்காயங்களுடன் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் எம்.டி.ஆர்.நகரைச் சேர்ந்தவர்  மாணிக்கவாசகம் மகன் கந்த வேலு (56). இவரது மனைவி மாரியம்மாள் (42). இத்தம்பதியர் தமது வீட்டிலேயே கூலிக்கு, தொழிற்சாலைகளுக்குத் தேவையான பட்டாசுத் திரிகளை தயாரித்து வந்தனராம். அவ்விதம் தயாரித்த திரிகளை தொழிற்சாலைகளுக்குத் தரும் விதமாக கட்டுகளாகக் கட்டி சிறு மூட்டைகளாக வீட்டின் உள் அறையில் பாதுகாப்பாக வைத்திருந்தனராம். 

 பட்டாசுத்திரி தீப்பற்றிய விபத்தில் எரிந்து நாசமான வீடு

இந்நிலையில், புதன்கிழமை காலை சுமார் 9 மணிக்கு மின் கசிவு காரணமாக பட்டாசுத் திரிகளில் தீப்பற்றி கடுமையான தீவிபத்து ஏற்பட்டதாம். இதில் கணவன், மனைவி இருவரும் தீயில் சிக்கிப் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் பிற வீடுகளுக்குத் தீ பரவாமல் போராடி தீயை அணைத்தனர். படுகாயமடைந்த கணவன், மனைவி இருவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுப் பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 

இவ்விபத்து தொடர்பாக அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com