முல்லைப் பெரியாறு அணையில் வியாழக்கிழமை ஆய்வுகள் நடத்திய துணைக்குழுவினர், மூன்று மதகுகளை இயக்கியும், கசிவு நீரின் அளவையும் சரிபார்த்தனர்.
பருவ மழை காலங்களில் முல்லைப் பெரியாறு அணை உறுதித்தன்மை மற்றும் பராமரிப்புகளை ஆய்வு செய்ய மூவர் குழு மற்றும் ஐவர் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. அதன் பேரில், கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், வியாழக்கிழமை முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
ஐவர் குழுத்தலைவரும், மத்திய நீர் வள ஆதார செயற்பொறியாளருமான சரவணக்குமார், தமிழக தரப்பில் அணையின் செயற் பொறியாளர் சாம் இர்வின், உதவி பொறியாளர் குமார், கேரளத் தரப்பில் கட்டப்பனை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பினுபேபி, உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் ஆய்வுகள் செய்தனர். முதலில் பிரதான அணை, பேபி அணை, காலரி, சுரங்கப்பகுதி, நீர்கசிவு அளவு ஆகியவைகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் மதகுப் பகுதிகளுக்கு சென்று மூன்று மதகுகளை (ஆர் - 3, வி - 2, 3) இறக்கி சரிபார்த்தனர். பின்னர் துணைக்குழுத்தலைவர் மற்றும் கேரள பொறியாளர்கள் வல்லக்கடவு வழியாக வாகனத்தில் சென்றனர். கரோனா தொற்று காலம் என்பதால் ஆலோசனைக்கூட்டம் நடைபெறவில்லை. இதனால் தமிழக பொறியாளர்கள் படகு மூலம் தேக்கடி வந்தனர்.
ஆய்வுகள் நடந்தது பற்றி தமிழக பொறியாளர் ஒருவரிடம் கேட்ட போது, மதகுகள் இயக்கம் சரிபார்க்கப்பட்டது, நீர் கசியும் அளவு தற்போதுள்ள நீர்மட்டத்திற்கேற்ப, நிமிடத்திற்கு 19.356 லிட்டர் ஆக உள்ளது, மேலும் அணையின் நீர்மட்டம் 130 அடியாக உயர்ந்தால், தலைமைக்கண்காணிப்பு குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
அதே நேரத்தில் 136 அடியாக உயர்ந்தால் மத்திய தலைமைக்கண்காணிப்புக்குழுவுக்கு தெரிவித்து, அணைப்பகுதிகளில் ஆய்வுகள் நடத்துவார்கள் என்றார்.