நாமக்கல்: நாமக்கல் அருகே கரோனா தடுப்பு பணிக்காக அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியில் கையூட்டு வாங்கிய ஆயுதப்படை காவலர் வெள்ளிக்கிழமை இரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் 18 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சென்னை உள்பட 4 மாவட்டங்கள் மற்றும் இதரப் பகுதிகளில் இருந்து கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வருவோர் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றனர். தமிழக அரசின் வாகன அனுமதிக்கான இ–பாஸ் பெற்றுள்ளார்களா, கரோனா நோய் பாதிப்பு அறிகுறி ஏதேனும் உள்ளதா என காவல் துறையினரும், சுகாதாரத் துறையினரும் இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாள்களாக நாமக்கல்-திருச்சி சாலையில் வளையப்பட்டி சோதனைச் சாவடியில் பணியில் உள்ள காவலர் ஒருவர் வாகனங்களை நிறுத்தி ரூ.100, 200 என கையூட்டு பெற்றுக் கொண்டு அனுப்பி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசுக்கு புகார் சென்றது. அதனையடுத்து விசாரணை மேற்கொண்ட அவர், வளையப்பட்டி சோதனைச் சாவடியில் பணியில் இருந்த ஆயுதப்படை காவலரான பிரபுதேவா 32 என்பவரை வெள்ளிக்கிழமை இரவு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இது குறித்து காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு கூறியது; சோதனைச் சாவடியில் தற்காலிக பணியில் இருந்த ஊழியர் ஒருவர் லாரிகள் மற்றும் இதர வாகனங்களுக்கு கிருமி நாசினி மருந்து தெளிப்புக்காக ரூ.20, 30 என பணம் வசூலித்து அதனை ஆயுதப்படை காவலரிடம் சென்று கொடுத்துள்ளார். இது பற்றி வந்த புகாரின் அடிப்படையில் அந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றார்.