திருப்பூர்: திருப்பூரில் 65 வயது முதியவர் உள்பட 2 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் 141 பேர் பாதிக்கப்பட்ட 117 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 24 பேர் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்த 29 வயது இளம் பெண், அங்கேரிபாளையத்தைச் சேர்ந்த 65வயது முதியவர் ஆகியோருக்கு கடந்த இரு நாள்களுக்கு முன்பாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இருவருக்கும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், இருவருக்கும் கரோனாநோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் தற்போது கோவை, இ.எஸ்.ஐ.மருத்துமவனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் 2,771 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைக்காலம் முடிவடைந்த 67 பேர் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.