தாராபுரம் அருகே கல் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த விவகாரத்தில் அவரது உறவினர்கள் கல்குவாரியை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குள்ளன் தள்ளி வலசு கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி (கிரஷர்) உள்ளது. இந்தக் குவாரியில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தக்குவாரியில் பொன்னிவாடியைச் சேர்ந்த எல்.கருப்புசாமி (38) என்பவர் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மாலையில் கல் உடைக்கும் இயந்திரத்தில் கருப்புசாமி வேலைசெய்து கொண்டிருந்தபோது இயந்திரத்தின் பெல்ட்டில் அவரது கை சிக்கியது.
அப்போது இயந்திரத்தில் இருந்து அவர் கையை எடுக்க முயற்சித்தபோது எதிர்பாராத விதமாக இயந்திரத்தில் அவரது உடல் முழுவதும் சிக்கிக் கொண்டது. இதில், கருப்புசாமி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அருகிலிருந்த தொழிலாளர்கள் கல்குவாரி உரிமையாளருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் வருவதற்கு தாமதமானதால் குவாரி மேலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற மூலனூர் காவல் துறையினர் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனிடையே, கருப்புசாமியின் சாவில் மர்மம் இருப்பதாகக்கூறி அவரது உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமை கல்குவாரியை முற்றுகையிட்டனர். மேலும், கருப்புசாமியைக் கொலை செய்து விட்டு இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தாக நாடகமாடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், கருப்புசாமியின் சாவுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரையில் சடலத்தை வாங்கமாட்டோம் என்றனர். இதுகுறித்து மூலனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.