தஞ்சாவூர்: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை தமிழக விவசாயிகள் ஏற்க மாட்டார்கள் என்றார் தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலர் பி.ஆர். பாண்டியன்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் இன்று அவர் தெரிவித்தது: நடிகர் ரஜினிகாந்தின் சிறந்த நடிப்பை வரவேற்கிறோம். அவர் நடிப்பதை மட்டுமே தொடர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். அரசியலுக்கு வருகிறேன் என அவரை நம்பி இருக்கிற கோடிக்கணக்கான ரசிகர்களை அவர் ஏமாற்றக்கூடாது.
அவரது நடிப்பின் மீது மோகம் கொண்ட ரசிகர்கள் அவரை பின் தொடர்கிறார்களே தவிர, அவர் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை.
தனது சொந்த லாபத்துக்காகவும் சுயநலத்துக்காகவும் இளைஞர்களிடையே அவ்வப்போது அரசியலுக்கு வரப் போவதாக ஆசைகாட்டி மோசம் செய்வதை தமிழக விவசாயிகள் ஏற்கமாட்டார்கள்.
ஐம்பது ஆண்டு காலமாக நடந்து கொண்டிருக்கும் காவிரி பிரச்சனைக்கு அவர் குரல் கொடுத்ததில்லை. வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது அவர்களுடைய குடும்பங்களுக்கு ஆறுதல் சொன்னது கிடையாது.
ஒக்கி புயல், கஜா புயல், தானே புயல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் போராடி கொண்டிருந்தபோது, அத்திட்டத்தைக் கைவிடுமாறு மத்திய அரசை வலியுறுத்தி குரல் எழுப்பியதில்லை.
இந்நிலையில் அரசியலுக்கு வருவோம் எனக் கூறி மக்களை ரஜினிகாந்த் ஏமாற்றுவதை கண்டிக்கிறோம் பாண்டியன்.