தஞ்சாவூர்: கரோனா பிரச்னை காரணமாக தஞ்சை மாவட்ட எல்லையில் இன்று காலை முதல் வெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்கள் சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மாவட்டத்தில் மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது. இதில் வெப்பமானி மூலம் பொதுமக்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா பரிசோதனை செய்யப்படுகிறது.
இதைத்தொடர்ந்து மாவட்டத்திலுள்ள 8 எல்லைகளில் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் மக்கள் அனைவரும் வெப்பமானி மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் பிறகே மாவட்டத்துக்குள் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகள், லாரிகள், கார்களில் பயணம் செய்யும் அனைவரும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.
திருச்சி சாலையில் உள்ள மாவட்ட எல்லையான புதுக்குடியில் மேற்கொள்ளப்பட்டுவரும் சோதனையை மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்த ராவ் ஆய்வு செய்தார்.