லண்டன்: கரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையாக, வெறுமனே மாநிலங்கள் மற்றும் நகரங்களை முடக்குவது ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் அவசரநிலைமைக்கான உயர்நிலை வல்லுநர் மைக் ரியான் கூறியதாவது:
கரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையாக, வெறுமனே மாநிலங்கள் மற்றும் நகரங்களை முடக்குவது ஆபத்தானது.
நாம் உண்மையில் கவனம் செலுத்த வேண்டியது என்னவென்றால், நோய்வாய்ப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது, வைரஸ் உள்ளவர்களைக் கண்டுபிடிப்பதுடன், அவர்களைத் தனிமைப்படுத்துவது, அவர்களின் தொடர்புகளைக் கண்டறிந்து அவர்களையும் தனிமைப்படுத்துவதுதான்.
திறமான பொது சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்காமல், நகரங்கள், மாநிலங்கள், மாகாணங்கள் என முடக்கப்படுவது ஆபத்தான ஒன்று என்றும், அவை முடக்கப்படும்போது, நோய் மேலும் தீவிரமாகப் பரவும் என்றார்.
பரிசோதனைகளுடன் கட்டுப்பாடுகளையும் இணைத்து, தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் சீனா மேற்கொண்ட நடவடிக்கைகளை மேற்கோள் காட்டிய அவர், நாம் வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுக்குள் கொண்டு வந்த பிறகும் வைரஸ் தொற்று குறித்த ஆய்வைத் தொடர வேண்டும், வைரஸை எதிர்த்துப் போராட வேண்டும் என்றார்.
பல தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன, ஆனால் ஒன்று மட்டுமே அமெரிக்காவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் பயனுக்குவர குறைந்தது ஒரு வருடமாவது ஆகும். அது முற்றிலும் பாதுகாப்பானது என்பதை உறுதி செய்ய வேண்டும். எந்தவொரு தடுப்பூசியும் உடனே அங்கீகரிக்கப்படாது, அங்கீகரிக்கப்பட்டாலும் ஒரு வருடத்திற்குப் பரவலாகக் கிடைக்கக் கூடிய வாய்ப்பு இல்லை. மக்கள் இயல்பாக இருக்க வேண்டும். நாம் பாதுகாப்பாக இருக்க உடனடியாகச் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும்.
சீனா மற்றும் பிற ஆசிய நாடுகளைப் பின்பற்றி ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பெரும்பகுதி, புதிய கரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
அமெரிக்கா, குறிப்பாக சான் பிரான்சிஸ்கோ மற்றும் நியூயார்க் போன்ற நகரங்கள் கிட்டத்தட்ட முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன, அவை ஒவ்வொன்றாக மாறுவதற்கான உத்திகளை உருவாக்கத் தொடங்க வேண்டும் என்று மைக் ரியான் கூறினார்.