கிருஷ்ணா, சித்தூர்: கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்காக 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளதால், ஆந்திரம் மற்றும் தெலங்கானா இடையேயான அனைத்து எல்லைகளும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக அடுத்த 21 நாள்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். இதன்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
திருவூருவில் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான சோதனைச் சாவடியை நுஜிவிடு துணை காவல் கண்காணிப்பாளர் பி. சீனிவாசுலு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"ஆந்திரம் மற்றும் தெலங்கானா இடையேயான அனைத்தும் எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. தெலங்கானாவுக்கான அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் காவல்துறையினருடன் ஒத்துழைக்க வேண்டும். சமூகத்தின் ஆரோக்கியத்திற்காக, மக்கள் சுய தனிமைப்படுத்தலைப் பின்பற்ற வேண்டும்" என சீனிவாசுலு கூறினார்.
மேலும் தினசரி தேவைகளை வாங்குவதற்காக மட்டுமே காலை 5 மணி முதல் காலை 8 மணி வரை மக்கள் வெளியே வர அனுமதிக்கப்படுவதாகவும், கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் ஒருவர் மற்றொரு நபருடன் 3 அடி தூர இடைவெளியை பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதற்கிடையில், ஸ்ரீ காலஹஸ்தி கோயில் நகரமான சித்தூரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சாலைகளில் மக்கள் செல்வதற்கும், நான்கு அல்லது அதற்கு மேற்பட்டவர்களை ஒன்று கூடுவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், மக்கள் இன்னும் வீடுகளை விட்டு வெளியே சாலைகளில் நடமாடுகிறார்கள். ஆனால் போலீஸ் அதிகாரிகள் அவர்களை திருப்பி அனுப்பி வருகிறார்கள்.